இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

ஏய்! வயிறே!




















மன்னித்துக் கொள் வயிறே!
மன்னித்துக் கொள்!
நான் என்ன
வைத்துக் கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்?

பொறுத்துக் கொள்க வயிறே!
இரண்டு நாட்கள்
தண்ணீர் கொடுத்தேனல்லவா?
இரு! இரு!
இப்போது தண்ணீர் தருகிறேன்
பொறுத்துக் கொள்

வறுமையில் பிறந்த எனக்கு
பசி தானே வாழ்க்கை பரிசு
உணவு கிடைத்தால்
கொடுத்திருப்பேனே
நான் என்ன செய்வது?

உனது பசிக்கு
உணவு தரவில்லைதான்
அதற்காக கோபத்தில்
ஏன் ஒத்துழையாமை செய்கிறாய்

உன்னுடைய ஒத்துழையாமையில்-ஏன்
உடலின் மற்ற
உறுப்புக்களையும்
உதவிக்கு அழைக்கிறாய்?
ஆதரவு கோருகிறாய்?
தனிக் கூட்டணி அமைக்க
ஏன் முற்படுகிறாய்

ஏய் கண்களே!
நீங்கள் ஏன் இயங்க மறுக்கிறீர்கள்?
ஓ! நீங்களும் வயிற்றின்
ஒத்துழையாமைக்கு ஆதரவோ?

ஏய் கால்களே!
உங்களுக்கு என்ன ஆனது?
ஏன் சோர்வடைகிறீர்கள்?
ஓ! நீங்களும் வயிற்றின் பக்கமா?

அதுசரி!
எல்லோரும் சேர்ந்து
என்மேல்
நம்பிக்கையில்லா தீர்மானமா?

ஏய் மனமே!
நீ இரும்புதான் போ
இவ்வளவு பசிக் கொடுமையிலும்
கையேந்தாதேயென்று
கையிற்கு கட்டளையிடுகிறாய்

நானிழிந்தால் நீயழிவாய்
நீயழிந்தால் நானழிவேன்
நமது உடலே
ஒரு கூட்டாட்சி தானே

எனது உடலுறுப்புக்களே!
எனக்கு தீனி கிடைத்தால்
நாம் உயிர்வாழ்வோம்
இல்லையெனில்
கரையானுக்குத் தீனியாவோம்